Thursday, September 4, 2014

பாடு பொருள்

அடி வானம் எங்கும் 
இடி முழக்கம் செய்ய 
இரை தேடச் சென்ற குருவி எல்லாம் மர 
இலை மறைத்திருக்கும் கூடு தேடி வர 
சாலை ஓரம் ஓடி ஆடி வாடி விட்ட 
சிறுமியர் எல்லாம் வீடு தேடி ஓடி வர 
வாசல் நின்று வாயாடி வாயாடி வயதான 
சாயல் மறைக்க சாயம் போட்ட பெருசெல்லாம் இடிச் 
சத்தம் கேட்டு களை(ல)ந்து செல்ல 
இரவு அரக்கன் சூரியனை முழுங்கி 
நிலவு மகளையும் நட்சத்திர குழந்தைகளையும் 
கட்டவிழ்த்து விட்ட வேளையில் 
மெத்தை மாடி வெட்ட வெளியில் 
சுகமான காற்றில் தன் 
சோகத்தை கலந்து 
சுகமான கீதம் பாடி கொண்டிருந்தான் அவன் 

பாட்டின் பொருள் வேறு என்றாலும் 
பாடு பொருள் அவள் தான் 
--------அருண் குமார்

எது பெருசு?

பிள்ளையரின் விளையாட்டு திடலான
பிள்ளையார் கோவில் வாசலிலே
ஓங்கி வளர்ந்த
ஒத்தை ஆல மரம் - அதை
சுத்தி கட்டிய கல் சுவற்றில்
தாயக் கரம் போட்டு
வெற்றிலை போட்ட
பொக்கைவாய் கிழவர் எல்லாம்
பொழுது போக்கி கொண்டிருந்தனர்
வழி சென்ற நானும்
விழி கொடுத்தேன்
விடலைகளின் விளையாட்டுக்கு
செவி கொடுத்தேன்
கிழடுகளின் உரையாடலுக்கு- கிழவரெல்லாம்
ஒபாமாவை பற்றியும் பேசவில்லை
உள்ளூர் அரசியலும் பேசவில்லை
பேச்செல்லாம்
வற்றி போன ஊர் ஓடையையும்
வறண்டு போன கோயில் கிணற்றையும்
வாடிப் போன வயலையும்
வாசம் மாறி போன மண்ணையும்
நேசம் மாறாத உறவுகளையும்
நேர்மை தவறாத நெஞ்சங்களையும் பற்றியே

பெருசென்று இக்கால
சிறுசு சொல்லும் எதையுமே
இப்பெருசுகள் பேசவில்லை

வாழ்ந்து முடித்த இவர்களை விட
வாழ துவங்கும் நமக்கேதும் தெரியுமா ??
மண்ணையும் மனதையும் மனிதனயுமே
மகத்தானத்தாய் மதிக்கும் இவர்
பொன்னையும் பொருளையுமே
பெருசென்று மதிக்கும் நாம்

பெரியவர்கள் என்று நாம் சொல்வது
வயதில் இல்லை
எண்ணத்திலே தான்